புது தில்லி: வரும் 2023ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் மக்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனித பயணம் சென்னையிலிருந்து தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பேரிடர் காலத்தில், ஹஜ் புனிதப் பயணம் தொடங்கும் விமான நிலையங்களின் பட்டியலிலிருந்து சென்னை நீக்கப்பட்டிருந்தது. ஹஜ் பயண புறப்பாட்டு இடங்களின் பட்டிலியலில் சென்னையை சேர்க்குமாறு தமிழக அரசு, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தரப்பில் இன்று பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ம.பி.யில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ‘நூா்ஜஹான்’ மாம்பழம்!
அந்த கடிதத்தில், இந்த ஆண்டும் கரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி, ஹஜ் பயண திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக சென்னையை புறப்பாடு இடமாக அறிவிக்கவில்லை என்றும், வரும் 2023ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம் புறப்பாட்டு இடங்களின் பட்டியலில் சென்னை விமான நிலையத்தை சேர்ப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
ஹஜ் புனிதப் பயணம் புறப்பாட்டு இடமாக சென்னை விமான நிலையத்தை இணைப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கூறியிருப்பதற்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தை ஹஜ் புனிதப் பயணத்தின் புறப்பாடு இடங்களின் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செல்வோர், கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.