திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே குழந்தையின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததால், பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட அவலம் நேர்ந்துள்ளது.
பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்ததில் 2 வயது குழந்தை மரணமடைந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தர மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரமேஷ்வர் ரெட்டி கூறுகையில், திருப்பதியில் 2 வயது குழந்தை உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினர். குழந்தையின் குடும்பத்தினர் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர். ஆனால், மருத்துவமனை விதிமுறைப்படி, உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் அனுப்ப இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது.
இதையடுத்து, குழந்தையின் உறவினர்கள் பைக்கில் வைத்து குழந்தையின் உடலை எடுத்துச் சென்றனர். இது குறித்து அவர்கள் தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.