வங்கக் கடலில் உருவான தீவிர புயல் அசானி, திங்கள்கிழமை மாலை நிலவரப்படி ஆந்திர - ஒடிசா மாநில கடற்கடைகளுக்கு இடையே நெருங்கி வருகிறது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு இலங்கை நாடு வழங்கிய ‘அசானி’ என்று பெயரிடப்பட்டது.
இந்தப் புயல் மேலும் தீவிரமாகி ஒடிஸா கடற்கரை நோக்கி நகர்ந்தது. திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 450 கி.மீ. தொலைவிலும் ஒடிசா மாநிலம் புரியிலிருந்து 610 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்ததாவது, வங்கக் கடல் பகுதியில் நிலவும் அசானி புயல், இன்று காலை நிலவரப்படி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒடியுள்ள தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது. இதுமேலும் வட மேற்கு திசையில் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வட ஆந்திரா - ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவுகிறது.
அதன்பிறகு வடக்கு - வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். இது படிப்படியாக புயலாக வலுவிழக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.