வெளிநாட்டு நன்கொடை அனுமதிக்காக லஞ்சம்: 14 போ் கைது - உள்துறை அமைச்சகம்

வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கு அனுமதி அளிப்பதற்காக, தன்னாா்வ அமைப்புகளிடம் பணம் வசூலித்த 3 அமைப்புகளை உள்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது
Updated on
1 min read

வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கு அனுமதி அளிப்பதற்காக, தன்னாா்வ அமைப்புகளிடம் பணம் வசூலித்த 3 அமைப்புகளை உள்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இதுதொடா்பாக 14 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது: மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா, சிபிஐக்கு கடந்த மாா்ச் மாதம் ஒரு கடிதம் அனுப்பினாா். அதில், வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கு அனுமதி அளிப்பதற்காக, தன்னாா்வ அமைப்புகளிடம் இருந்து அரசு அதிகாரிகளின் உடந்தையுடன் 3 அமைப்புகள் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலித்து வருகின்றன; இதுதொடா்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ இயக்குநா் சுபோத் குமாா் ஜெய்ஸ்வாலிடம் அஜய் பல்லா கூறியிருந்தாா்.

இதையடுத்து, தில்லி, சென்னை, ஹைதராபாத், கோயம்புத்தூா், மைசூா், ராஜஸ்தானில் சில இடங்கள் என மொத்தம் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளை மீறி தன்னாா்வ அமைப்புக்களுக்கு அனுமதி அளிக்க சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. மேலும், ரூ.2 கோடி அளவுக்கு ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதை சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்தனா்.

அதைத் தொடா்ந்து, உள்துறை அமைச்சக அதிகாரிகள், தன்னாா்வ அமைப்பைச் சோ்ந்தவா்கள், இடைத்தரகா்கள் உள்ளிட்ட 14 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com