அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சரேடியோ, தாரங், தேமாஜி, திப்ருகர், நல்பாரி உள்பட 24 மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் பலியாகி உள்ளனர்.
இதையும் படிக்க | நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை
கேட்சர், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹோஜாய் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினரின் செயல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
லும்டிங் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான சிபு மிஸ்ரா வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யச் சென்ற இடத்தில் நீரில் நனையாமல் இருக்க மீட்புப் பணியில் இருந்த காவலரின் முதுகில் ஏறி சென்றது விவாதப் பொருளாகியுள்ளது.
இதையும் படிக்க | பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவா் சுநீல் ஜாக்கா் பாஜகவில் இணைந்தார்
வெள்ள பாதிப்பை ஆய்வு சென்ற இடத்தில் காலில் தண்ணீர் கூட படாமல் இருக்க மீட்புப் படை வீரரின் முதுகில் ஏறிச் சென்று படகில் இறங்கிய சிபு மிஸ்ராவின் செயல் பலத்த எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.