நிகழாண்டு முதுநிலை நீட் தேர்வு 267 நகரங்களில் 849 மையங்களில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன. இதையடுத்து, முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், முதுநிலை நீட் தேர்வானது திட்டமிட்டபடி நடைபெறும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது.
இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வு அனைத்து மையங்களிலும் இன்று மிகவும் அமைதியாக நடைபெற்றது. தேர்வு மையங்களில் தேர்வு நடத்துவதற்கு 1,700 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 849 மையங்களில் நடைபெற்ற முதுநிலை நீட் தேர்வை 2,06,301 தேர்வர்கள் எழுதினர்.
இந்தத் தேர்வு 3 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெற்றது.
முன்னதாக, முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் கடந்த மே 13-ம் தேதி மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.