பாஜக தலைமையிலான மத்திய அரசு பழிவாங்கும் அரசியலை செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கிப் பேசியுள்ளார்.
கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிய வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரௌத்துக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று (நவம்பர் 10) ஜாமீன் வழங்கியது. மேலும், சஞ்சய் ரௌத் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது எனவும் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சிவசேனை எம்.பி.க்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதில் இருந்தே பாஜகவின் பழிவாங்கும் அரசியல் தெளிவாகத் தெரிவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மும்பை சிறப்பு நீதிமன்றம் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத்துக்கு எதிராக போடப்பட்ட வழக்கு சட்டவிரோதமானது என தெரிவித்து ஜாமீன் வழங்கியுள்ளது. விசாராணை அமைப்புகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை சட்டவிரோத வழக்குகளைப் பதிவு செய்ய பயன்படுத்தியுள்ளனர். சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத்தின் ஜாமீன் அனுமதியிலிருந்து பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் தெளிவாகத் தெரிகிறது என்றார்.