புதிய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தை சீர்திருத்தம் செய்யக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில், தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகளை அறிந்துகொள்ள ஆவணங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு தலைமை வழக்குரைஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர்களின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் தேர்தல் ஆணையச் சட்டம் 1991-ன் படி, அவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும் வரை பதவியில் நீடிக்கலாம் என வரையறை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சமீப காலங்களில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறுகிய காலமே பதவியில் இருக்கும்படி உள்ளது. இதனால், இதில் சீர்திருத்தம் செய்யக்கோரி பொதுநல அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், புதிய தேர்தல் ஆணையராக கடந்த 19ஆம் தேதி அருண் கோயல் நியமிக்கப்பட்டார். அவர் எதன் அடிப்படையில் அருண் கோயல் நியமிக்கப்பட்டார், எந்தெந்த நடைமுறைகள் அதில் பின்பற்றப்பட்டன என்பது குறித்து அறிந்துகொள்வதற்காக அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாள் முழுவதும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வலியுறுத்தி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.