கேரளத்தில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்ளச் சென்றபோது, அவர்களுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த காதலர்கள் நீலன் கிருஷ்ணா மற்றும் ஆத்விகா. மூன்றாம் பாலினத்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதற்கான பணிகளை முறைப்படி செய்து, கொல்லங்கோடு பகுதியிலுள்ள கச்சம்குறிச்சி மகாவிஷ்ணு கோயிலில் வியாழக்கிழமை (நவ.24) திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். திருமணப் பத்திரிகை அடித்து கோயிலில் திருமணம் நடைபெறுவதாக பலருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோயில் நிர்வாகம் அவர்கள் கோயிலினுள் தாலி கட்டிக்கொள்ள அனுமதி மறுத்துள்ளது. இதனால், அவர்கள் கோயிலுக்கு அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தது.
இது தொடபாக பேசிய கோயில் நிர்வாகி மோகனன், கச்சம்குறிச்சி கோயில் மலபார் தேவசம்போர்டுக்கு கீழ் செயல்படுகிறது. இதனால், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு முன்னுரிமையில்லை. அவர்கள் கோயிலுக்குள் தாலி கட்டிக்கொள்ள அனுமதியில்லை எனக் குறிப்பிட்டார்.
திருமண ஏற்பாடுகள் செய்து, அனைவரையும் அழைத்தபிறகு தாலி கட்டிக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்களின் திருமணம் அருகிலிருந்த செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக பேசிய நீலன் கிருஷ்ணா, எங்களுக்கு யாருடைய ஆதரவும் கிடைக்கவில்லை. கோயில் நிர்வாகத்தினர் எங்களுக்கு எதிராகவே நிற்கின்றனர். கோயிலினுள் தாலி கட்டிக்கொள்ள அனுமதி தர மறுக்கின்றனர். மாற்றுப் பாலினத்தவர்களாகப் பிறந்தது எங்கள் குற்றமா? என கேள்வி எழுப்பினார்.
நீலன் கிருஷ்ணா மற்றும் ஆத்விகா ஆகியோர் கொல்லங்கோடு பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இதில் நீலன் கிருஷ்ணா ஆலப்புழாவையும், ஆத்விகா திருவனந்தபுரத்தையும் சேர்ந்தவர்கள். ஆத்விகாவின் பெற்றோர் உள்பட 150 பேர் திருமணத்திற்காக வந்திருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரையும் கோயில் நிர்வாகத்தின் அனுமதி மறுப்பால் காக்கவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக வேதனை அடைகிறார் 3ஆம் பாலினத்தைச் சேர்ந்தவரான நீலன் கிருஷ்ணா.