
மகப்பேறு சிகிச்சையின்போது 7ஆம் வகுப்பு மாணவி, குழந்தை பலி
பெர்ஹாம்பூர்: ஒடிசா மாநிலம் பெல்கார் பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பெண்கள் பள்ளியில் படித்து வந்த 7ஆம் வகுப்பு மாணவி மகப்பேறு சிகிச்சையின்போது பலியானார். அவருக்குப் பிறந்த ஆண் குழந்தையும் இறந்தது.
கந்தமால் மாவட்டத்தில் உள்ள ரெய்கியா சமுதாய சுகாதார மையத்தில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருந்த 13 வயது சிறுமிக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரும், பிறந்த குழந்தையும் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க | வழிகிற தேவனும் சாக்லேட் வர்மனும் - யாருடைய பொன்னியின் செல்வன் இவன்?
கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி, அச்சிறுமி கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் பெல்கார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விடுதி நிர்வாகி பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.
உடனடியாக குழந்தைகள் நல ஆணையம் முன்பு சிறுமி ஆஜர்படுத்தப்பட்டு பிறகு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில்தான் அக்டோபர் மாதம் பிரசவ வலி ஏற்பட்டு காப்பகத்திலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
பிறகு குழந்தையும் சிறுமியும் ரெய்கா சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அப்போதே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.