அசாமில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தேமாஜி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து சியாங் நதி மற்றும் பல துணை நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து, ஜோனாய் துணைப்பிரிவின் கீழ் உள்ள 10 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
திகாரி மற்றும் தெலாம் கிராம பஞ்சாயத்துப் பகுதிகள் உள்பட பல ஹெக்டேர் விளைநிலங்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
உள்ளூர் நிர்வாகத்தின் கூற்றுப்படி, 10-12 கிராமங்களைச் சேர்ந்த கிட்டதட்ட 200 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் நிலைமையைக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசாமில் இந்தாண்டு இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 192 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.