
மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில் தாய் மற்றும் அவரது 10 வயது மகள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தானது கொல்கத்தா மற்றும் சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 16-இல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலை 16-இல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க: சர்ச்சைகளுக்கு நடுவே சாதித்த தீப்தி சர்மா!
இந்த விபத்து குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: இந்த சம்பவம் இன்று (அக்டோபர் 15) காலை 6.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. தாய் மற்றும் மகள் சாலையோரத்தில் பேருந்திற்காக காத்திருந்தபோது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் அவர்கள் இருவரின் மீதும் மோதியது. ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாரும் இல்லை. இந்த விபத்தில் தாய் மற்றும் அவரது மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் இது போன்ற விபத்துகள் நடப்பது குறித்து புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர். ஒரு கட்டத்தில் போராட்டத்தின் தீவிரம் அதிகமாகி விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸுக்கு மக்கள் தீ வைத்தனர். விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...