சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை, அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரூபாய் மதிப்பு சரிவு குறித்த செய்தியாளர் கேள்விக்கு அவர் அளித்த பதில்,
அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச சந்தையில் வலுவான நிலையில் உள்ளது. இதனால் மற்ற அனைத்து நாடுகளின் நாணயங்களும் அதற்கு எதிராகவே செயல்படுகின்றன. நான் தொழில்நுட்ப ரீதியாக பேசவில்லை. எனினும், அந்தவகையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவுள்ளது.
சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளின் நாணய மதிப்புகளை விட இந்திய ரூபாயின் மதிப்பு மேலான நிலையிலேயே உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையவில்லை. அமெரிக்க டாலர் மதிப்பு கூடுதலாக உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் முயற்சிகள் அனைத்தும் ஏற்றத்தை நோக்கியதாகவே உள்ளது என நினைக்கிறேன். இது இந்திய ரூபாய் மதிப்பை நிலைப்பெறச் செய்வதற்காக அல்ல எனக் குறிப்பிட்டார்.
கடந்த திங்கள் கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82.68 என்ற அளவுக்கு சரிந்தது குறிப்பிடத்தக்கது.