ஹிந்தி மொழியில் மருத்துவக் கல்வி தொடங்கி வைப்பது மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திடும் என மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக ஹிந்தி மொழியில் மருத்துவக் கல்வியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடக்கிவைக்கவுள்ளார்.
இதனையொட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்தியப் பிரதேச மருத்துவத் துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங், இது மிகப்பெரிய நாள். நாட்டில் முதல் முறையாக ஹிந்தி மொழியில், மருத்துவத் துறை பாடப்புத்தகங்கள் கொண்டுவரப்படவுள்ளன. உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் ஹிந்தி மொழி மருத்துவப் புத்தகங்களை அறிமுகம் செய்யவுள்ளனர்.
முதல்கட்டமாக உடற்கூறியல், உடலியல், உயிரிவேதியியல் ஆகிய துறைகளுக்கான புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. ஹிந்தி மொழியில் மருத்துவப் படிப்பு சாத்தியமாகவுள்ளது. இதனால், எந்த படிப்பும் இனி ஹிந்தி மொழியில் சாத்தியப்படும். இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக ஹிந்தி மொழியை பின்னணியாகக் கொண்ட இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.