புது தில்லி: திக் திக் நொடிகளுடன், நான்கு பேருமே சாகப்போகிறோம் என்று ஃபேஸ்புக் லைவ்வில் சிரித்தபடி ஒருவர் சொல்ல அடுத்த நிமிடமே நால்வரும் உடல்சிதறி பலியாகினர்.
தாங்கள் பயணித்த பிஎம்டபிள்யூ காரில் ஏறிய நான்கு நண்பர்களும், படுபயங்கர வேகத்தில், வெள்ளிக்கிழமை இரவு எக்ஸ்பிரஸ் வே சாலையில் பூர்வாஞ்சல் அருகே சுல்தான்பூர் என்ற இடத்தில் பயணித்தபோது, அது விபத்தில் சிக்கி சுக்குநூறானது.
தங்களது வேகத்தை ஃபேஸ்புக் லைவ்வில் காண்பித்துக் கொண்டே வந்த ஒருவர், தங்களது கார் 230 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகவும், அடுத்து 300 கிலோ மீட்டர் வேகத்தைத் தொடப்போவதாகவும் ஒருவர் லைவ்வில் சொல்ல, மற்றொருவரோ நாங்கள் நால்வரும் சாகத்தான்போகிறோம் என்று சிரித்தபடி லைவ் கமெண்ட்ரி கொடுக்க அடுத்த நிமிடம் அது நடந்தே விட்டது. ஆம் கார் டிரக் மீது மோதி விபத்துக்குள்ளாகி, நால்வரும் இறந்து போகினர்.
டாக்டர் ஆனந்த் பிரகாஷ் (35), பிகாரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர். இவர்தான் அந்த காரை ஓட்டியவர். இவருடன் இறந்தவர்கள் பொறியாளர் தீபக் குமார், தொழிலாளர்கள் அகிலேஷ் மற்றும் முகேஷ். அனைவரும் சுமார் 35 வயதுடையவர்கள். தில்லி நோக்கிச் சென்றவர்கள் தங்களது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் டிரக் ஓட்டுநர் தேடப்பட்டு வருகிறார். பிஎம்டபிள்யு கார் தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விபத்துக்குள்ளான கார் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த காவல்துறையினர் கூறுகையில், ஆனந்த் குமாரின் உடல் மட்டும்தான் சுக்குநூறான காருக்குள் இருந்தது. மற்ற மூவரின் உடல் பாகங்களும் சாலையின் பல இடங்களில் சிதறிக் கிடந்தன. விபத்தில் சிக்கிய கார் எந்தவிதமான வாகனம் என்பதே தெரியாத அளவுக்கு காணப்பட்டது என்றார்.