மத்தியப் பிரதேசம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் மூன்று வயது சிறுவன் தன் தாய்க்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.
சிறுவன் தனது தந்தையுடன் ஞாயிறன்று புர்ஹான்பூரில் உள்ள தெத்தலை காவல் நிலையத்திற்குச் சென்று, காவல்நிலைய பொறுப்பாளர் பிரியங்காவிடம் தனது தாய்க்கு எதிராக புகார் அளித்துள்ளான்.
புகாரை பதிவு செய்ய ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து, சிறுவன் கூறும் புகாரை அதிகாரி பதிவு செய்துள்ளார். சிறுவன் தனது தாய் மிட்டாயைத் திருடியதாகவும், தன்னை எப்போதும் திட்டுவதாகவும் கூறியுள்ளான். புகாரில் கையெழுத்திடச் சிறுவனிடம் அதிகாரி கேட்டபோது, அவர் காகிதத்தில் சில கோடுகளையும் வரைந்துள்ளான்.
இதனால், மகிழ்ச்சியடைந்த காவல் அதிகாரி, சிறுவனுக்கு ஆறுதல் கூறி, யார் வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அச்சமின்றி செல்லலாம், புகார் அளிக்கலாம் என்று கூறி அனுப்பிவைத்தனர். இந்த விடியோ அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிறுவனின் தந்தை கூறுகையில்,
குளித்த பின் நெற்றியில் கருப்பு மை பூசுவதற்கு அனுமதிக்காததற்காக அவனது தாய் அவனைத் திட்டியதாகவும், இதனால் கோபமடைந்த சிறுவன் தாய்க்கு எதிராக புகார் அளிக்க வற்புறுத்தியதால், அவனை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாகவும் கூறினார்.
குழந்தை காவல்துறையில் ஈர்க்கப்பட்டதாகவும், அவர்களைப் பற்றி அறிய ஆர்வமாக இருப்பதாகவும் புர்ஹான்பூரின் காவல் கண்காணிப்பாளர் ராகுல் குமார் கூறினார்,
இந்த விடியோ வைரலான பிறகு, மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை சிறுவனுக்கு விடியோ அழைப்பில் என்ன வேண்டும் என்று கேட்டார், மேலும் வரும் தீபாவளி பண்டிகையன்று சிறுவனுக்கு சாக்லேட் மற்றும் சைக்கிள் அனுப்புவதாகவும் அவர் உறுதியளித்தார்.