பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியின் மிரட்டலான ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்ந்த் சிங் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் குரூப் 2-வில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதின. டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
160 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் த்ரில் வெற்றியை தந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங்க் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள், இந்த வெற்றி டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணியின் சிறப்பான தொடக்கம். தீபாவளி தொடங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார். சிறப்பாக விளையாடிய விராட் கோலியின் ஆட்டத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் அற்புதமான ஆட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், விராட் கோலி தனது வாழ்க்கையின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக விளையாடினார் என்றும், இந்திய அணியின் வெற்றி உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.