ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்கள் அச்சிட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின்போது,
புதிய ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படங்களை அச்சிடலாம். புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படமும், மறுபுறம் இரு தெய்வங்களின் படமும் இருக்கக்கூடும்.
முயற்சிகள் செய்தாலும், தெய்வங்கள் நம்மை ஆசிர்வதிக்கவில்லை என்றால், சில நேரங்களில் நம் முயற்சிகள் பலனளிக்காது.
ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்கள் அச்சிட பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
கரன்சி நோட்டுகளில் லட்சுமி-விநாயகர் புகைப்படம் இருந்தால், நம் நாடு செழிக்கும், பொருளாதாரம் முன்னேறும். இது குறித்து ஓரிரு நாள்களில் பிரதமருக்கு கடிதம் எழுதுவேன் என்றார்.
இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவின் ரூபாய் தாளில் விநாயகர் படம் இடம் பெற்றுள்ளதை அவர் உதாரணம் காட்டினார்.
இந்தோனேசியாவால் முடியும் என்றால், ஏன் நம்மால் முடியாது? புகைப்படங்களை புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சிடலாம் என்று அவர் கூறினார்.
இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை, தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இந்தியா பணக்கார நாடாக இருக்க வேண்டும், இங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
மேலும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைப் பெரிய அளவில் திறக்க வேண்டும் என்றார்.
தில்லி மாநகராட்சி தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி முழுமையாகத் தயாராக உள்ளதாகவும், தேசிய தலைநகர் மக்கள் பாஜகவை நிராகரிப்பார்கள் என்றும் அவர் கூறினார். தில்லியைத் தூய்மையான காற்று கொண்ட நகரமாக மாற்ற விரும்புவதாக கேஜரிவால் கூறினார்.