கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில ஆளுநர் இல. கணேசனின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வரவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இல. கணேசனின் மூத்த சகோதரரின் பிறந்த நாள் வரும் நவம்பர் 3ஆம் தேதி, சென்னையில் உள்ள இல்லத்தில் கொண்டாடப்படவிருக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து ஆளுநர் இல. கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, அவர் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இல. கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெறும் இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.