கடந்த 5 ஆண்டுகளில் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் 1,500 இளைஞர்கள் இணைந்துள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
அசாம் சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இணைந்த இளைஞர்களின் விவரங்கள் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக முதல்வர் பதிலளித்துள்ளார்.
அதில், கடந்த 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தடை செய்யப்பட்ட 5 இயக்கங்களில் 1,561 இளைஞர்கள் இணைந்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்த காலகட்டத்தில் தடை செய்யப்பட்ட 23 இயக்கங்களை சேர்ந்த 7,935 பேர் அரசிடம் சரணடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.