தில்லி அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வியின் காரணமாக 1,141 மாணவர்கள் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தியாகராஜ அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கேஜரிவால், ஜேஇஇ மற்றும் நீட் நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களைப் பாராட்டிப் பேசினார்.
நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 18 கோடி குழந்தைகள் படிக்கின்றனர், அவர்களில் பெரும்பாலானோர் ஏழ்மையான நிலையில் உள்ளனர் என்று அவர் கூறினார்.
தில்லியில் நாங்கள் செய்ததைப் போல இந்த அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்த முடியும். நாங்கள் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கினோம். அதன் காரணமாகவே அரசுப் பள்ளிகளில் 1,141 மாணவர்கள் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கல்வி என்பது தொண்டு அல்ல, அது உரிமை. ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல கல்வியை வழங்கினால் நாட்டின் வறுமை ஒழிக்க முடியும் என்றார்.
ஜேஇஇ மற்றும் நீட் தேர்வில் முதல் 1000 ரேங்க் பெற்ற 28 மாணவர்களை முதல்வர் பாராட்டினார்.