கடந்த 1997ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தில்லியின் துக்ளகாபாத் பகுதியில் வசித்து வந்த கிஷண் லால் கொலை செய்யப்பட்டார். கடந்த 25 ஆண்டுகளாக குற்றவாளியை தேடி வந்த காவலர்கள், ஒரு மாத காலம் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வழக்கில் துப்புதுலங்கியுள்ளனர்.
கிடைத்த வேலைகளைச் செய்து குடும்பத்தை நடத்தி வந்த கிஷண் லால் கொல்லப்படும்போது, அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இதில் குற்றவாளி ராமு தலைமறைவாகிவிட, வழக்கு கிடப்பில் போடப்பட்டது. தற்போது நிலுவையில் இருக்கும் வழக்குகளை விசாரித்து வடக்கு மாவட்ட தில்லி காவல்துறை குழுவினர் இந்த வழக்கை 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூசு தட்டி எடுத்தனர்.
இதன் பிறகு, கிஷண் லாலின் மனைவி சுனிதாவுக்கு தில்லி காவல்துறையிடமிருந்து ஒரு நாள் அழைப்பு வந்தது. லக்னௌ வருமாறு. சுனிதா தனது 24 வயது மகனுடன் லக்னெள் சென்ற போது, கணவரைக் கொலை செய்த 50 வயது ராமு கைது செய்யப்பட்டிருப்பதை காவல்துறையினர் தெரிவித்தனர். சுனிதா குற்றவாளியை அடையாளம் காட்டினார்.
25 ஆண்டு கால வழக்கில், நேரில் பார்த்த சாட்சியமோ, குற்றவாளியின் புகைப்படமோ, குற்றவாளி எங்கிருக்கிறார் என்பது குறித்து ஒரு துப்பும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை.
இதற்காக அமைக்கப்பட்ட காவல்துறை தனிப்பிரிவினர் பல மாதங்கள் தில்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, காவலர்கள் காப்பீட்டு முகவர்கள் போல நடித்து ராமுவின் உறவினர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர். அதைக் கொண்டு, ராமுவின் மகன் ஆகாஷின் செல்லிடப்பேசி எண்ணைப் பெற்று, அவனது முகநூல் பக்கத்தின் வாயிலாக, அவர் எங்கே வாழ்கிறார் என்பதை காவலர்கள் கண்டறிந்தனர்.
பிறகு ஆகாஷைப் பிடித்து விசாரித்த காவலர்கள், தனது தந்தை அசோக் யாதவ் என்ற பெயரில் ரிக்சா ஓட்டி வாழ்ந்து வருவதைக் கூறினார்.
இதையடுத்து, இ-ரிக்சா முகவர் என்ற பெயரில் பல ரிக்சா ஓட்டுநர்களைத் தொடர்பு கொண்டு பேசிய காவலர்கள், ஒரு மாத காலம் பல ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி, இறுதியாக, அசோக் யாதவ் என்ற நபரிடம் பேசினோம். அவர் மீது சந்தேகம் வந்து, அவரைக் கைது செய்து உறவினர்களிடம் அவர் ராமுதான் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 1997ஆம் ஆண்டு கிஷண் லாலை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.