கூட்டணியை மாற்றி பிகார் மக்களை ஏமாற்றிவிட்டார் நிதீஷ் குமார் என்று பிகார் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகி, லாலு பிரசாத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியமைத்த பிறகு, முதல் முறையாக பிகார் சென்றிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, மகாராஷ்டிர மாடலை மீண்டும் உருவாக்க பாஜக முயன்றதாகக் குற்றம்சாட்டி, முதல்வர் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகி, லாலு பிரசாத் யாதவுடன் கைகோர்த்துக் கொண்டு பிகாரில் புதிய ஆட்சியைத் தொடங்கினார்.
இது குறித்து விமரிசித்த அமித் ஷா, பிகாரில் நடந்த பேரவைத் தேர்தலில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்குத்தான் மக்கள் வாக்களித்தனர். ஆனால், கூட்டணியிலிருந்து விலகி பிகார் மக்களை ஏமாற்றிவிட்டார் நிதீஷ் குமார் என்று குறிப்பிட்டார்.
மேலும், இங்கிருந்து அங்கு மாறிவிட்டால், நிதீஷ் குமார் பிரதமராகிவிடுவாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அமித் ஷா.