புது தில்லி: புகையிலைப் பொருள்களைப் போல மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய பொது நலன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மாநில அரசுகளின் கொள்கை தொடர்பாக விவகாரங்களில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த பொது நலன் மனுவில், புகையிலையை விடவும் உடலுக்கு கேடு விளைவிப்பது மதுபானங்கள். எனவே, புகையிலையில் உடலுக்குக் கேடு என்பதை விளக்கும் படங்கள் மற்றும் வாசகங்கள் இடம்பெறுவது போல, மதுபாட்டில்களிலும் வாசகங்கள் இடம்பெற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது மாநில அரசுகளின் கொள்கை விவகாரங்கள். எனவே, அதில் நீதிமன்றம் தலையிடாது என்று தெரிவித்துவிட்டது.
அது மட்டுமல்லாமல், மதுபானத்தை அளவோடு எடுத்துக் கொண்டால், அதனால் உடலுக்கு சில நன்மைகள் இருப்பதாக பரிந்துரைகள் உள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.