கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 150 தொகுதிகளுக்குமேல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளையுடைய கர்நாடகத்திற்கு மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. முடிவுகள் மே 13ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதனால், கர்நாடகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் இன்று (ஏப். 17) வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு தான் போட்டியிடவுள்ள ராமநகரா மாவட்டத்திலுள்ள கனகபுரா தொகுதியில் பேரணி மேற்கொண்டார். இவர் இந்தத் தொகுதியில் கடந்த 7 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளார்.
பேரணியைத் தொடர்ந்து கனகபுரா தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், கர்நாடக மக்களின் ஆசியுடன் கனகபுரா தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளேன். கர்நாடக மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஊழலையும் வறுமையையும் அடியோடு அழிப்பதற்கான வழி இன்னும் சில நாள்களில் பிறக்கும்.
பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தள அஜெண்டா குறித்து எனக்குத் தெரியாது. நான் பல தலைவர்களை இங்கு உருவாக்கியுள்ளேன். ஜகதீச் ஷெட்டர், லக்ஷ்மன் சாவடி போன்ற பிற கட்சியை சேர்ந்த அமைச்சர்கள். எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இணைய விரும்புகின்றனர். கர்நாடகத்தில் நிச்சயம் 150 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். நாங்கள் கர்நாடகத்தில் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.