காங்கிரஸ் தலைவர்களான சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சிவக்குமார் ஆகிய மூவரும் கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு ஆபத்தாக இருப்பவர்கள் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
இந்த காங்கிரஸ் தலைவர்கள் மூவரையும் குறிப்பிட எஸ்எம்எஸ் என்ற புதிய வார்த்தையையும் அவர் உருவாக்கியுள்ளார். கர்நாடக பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடகம் சென்றுள்ள அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு மட்டுமே மாநிலத்தை ஆபத்திலிருந்து காக்க உதவும். எஸ்எம்எஸ் (சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, சிவக்குமார்) கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானவர்கள். எப்படி ஆபத்தான எஸ்எம்எஸ் உங்களது தொலைபேசியை அழித்துவிடுமோ அதே போல இந்த எஸ்எம்எஸ் கர்நாடகத்தின் எதிர்காலத்தைப் பாழாக்கிவிடும். இரட்டை என்ஜின் அரசால் மட்டுமே கர்நாடகத்தைக் காப்பாற்ற முடியும். பிரதமர் நரேந்திர மோடி வளமையான இந்தியாவை உருவாக்கி வருகிறார். ஆனால், காங்கிரஸ் அவருக்கு எதிராக விஷத்தினை பரப்பி வருகிறது. சிலர் பிரதமர் மோடியை மரணத்தின் வியாபாரி என்கிறார்கள், சிலர் மோடிக்கள் திருடர்கள் என்கிறார்கள், சிலர் அவரை விஷப் பாம்பு என்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி காங்கிரஸிடமிருந்து பரப்பப்படும் விஷங்களை அருந்தும் நீலகண்டன் என்றார்
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.