செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை 4-ஆவது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், "இந்த வழக்கில் தொடர்புடைய ஏனைய சாட்சிகள் முன்வைத்து விசாரிப்பதற்கும், ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரை காவலில் வைத்து விசாரிப்பதற்குத் தேவையான அதிகாரம் அமலாக்கத் துறையிடம் உள்ளது.
ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவரின் நடத்தையானது நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக, காவலில் வைத்து விசாரிக்கும் உரிமையை அமலாக்கத் துறை பயன்படுத்துவதைத் தடுத்துவிட்டது.
"உண்மையை உயிர்ப்பிப்பது' என்பது புலனாய்வு அமைப்பின் உரிமை மட்டுமல்ல, அமைச்சர் இழைத்ததாக கூறப்படும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் கூட. ஆனால், தலையீடு சூழ்நிலைகள் காரணமாக அமலாக்கத் துறை அந்தக் கடைமையைச் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை' என்றார்.
மனுதாரர் தரப்பில் முகுல் ரோத்தகி வாதிடுகையில், "சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் காவலில் உள்ள குற்றம்சாட்டப்பட்ட நபரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு எந்த உரிமையும் இல்லை' என்றார். இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.