ஆந்திரத்தின் அன்னமயா மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தவறிவிட்டதாகக் கூறி அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சில நாள்களுக்கு முன்பு அன்னமயா மாவட்டம் புரபாலகோட்டா பகுதிக்கு சென்றபோது ஆளும் கட்சிக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது. இதில், காவல் துறையினர் உள்பட 50 பேர் படுகாயமடைந்தனர். மேலும் காவல் துறை வாகனங்கள், ஏராளமான கடைகள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அந்த கட்சியைச் சேர்ந்த 20 பேர் மீது கொலை முயற்சி, கலவரத்தைத் தூண்டுதல், வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுதல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல சித்தூர் மாவட்டம் புங்கனூர் பகுதியிலும் கலவரம் ஏற்பட்டது. அங்கு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | கேரளா அல்ல, இனி கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற முடிவு!