அடுத்த ஆண்டு மோடி நிச்சயம் கொடியேற்றுவார், ஆனால் அவர் வீட்டில் கொடியேற்றுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுதந்திர நாள் இன்று (ஆக. 15) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் கொடியேற்றினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொள்ளவில்லை.
காலையில் எனது இல்லத்திலும், பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு இருந்ததால் செங்கோட்டைக்கு என்னால் வர இயலவில்லை என்று கூறியிருந்தார்.
இதையும் படிக்க | ஆளுநர் விருந்தில் பங்கேற்காதவர்களுக்குத்தான் நஷ்டம்: தமிழிசை பேட்டி
சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசும்போது, அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் நான் கொடியேற்றுவேன் என்று கூறினார்.
இதற்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'வெற்றி பெற்று மீண்டும் வருவேன் என்று ஒவ்வொருவரும் கூறுவார்கள். ஆனால் வெற்றி, தோல்வி மக்கள் கைகளில் உள்ளது. 2024 ஆம் ஆண்டும் நான்தான் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என்று பிரதமர் கூறுவது அவரது ஆணவத்தைக் காட்டுகிறது.
சுதந்திர தின உரையில் கூட எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்பவரால் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்?
அடுத்த ஆண்டு மோடி நிச்சயம் கொடியேற்றுவார், ஆனால் அவர் தனது வீட்டில் கொடியேற்றுவார்' என்று தெரிவித்தார்.