

காவிரி விவகாரம் தொடர்பாக ஆக.23ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின்னர் முக்கிய முடிவு எடுக்கப்படும். கர்நாடகத்தில் மழை குறைவு காரணமாக இங்குள்ள விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற கடினமான சூழநிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது அரசின் கடமை.
உச்சநீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கை எதிர்கொள்ள உரிய வாதங்களுடன் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். புதுதில்லியில் ஆக.11ஆம் தேதி நடந்த காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையக்கூட்டத்தில், காவிரி ஆற்றில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீரை திறந்துவிட கா்நாடகத்துக்கு உத்தரவிட்டது. தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட தயாராக இருப்பதாக துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் ஆக.14ஆம் தேதி தெரிவித்திருந்தாா்.
இதனிடையே, குறுவை சாகுபடிக்கு தினமும் விநாடிக்கு 24,000 கன அடி தண்ணீரை விடுவிக்க கா்நாடகத்துக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடா்ந்துள்ளது. இதை தொடா்ந்து, கடந்த 3 நாட்களாக தினமும் சராசரியாக விநாடிக்கு 15,000 கன அடி காவிரி நதிநீரை தமிழகத்துக்கு கா்நாடகம் விடுவித்துள்ளது. இதற்கு பாஜக, மஜத உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மண்டியா, மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.