நீட் தேர்விலிருந்து விலக்குபெறும் வரை திமுக ஓயாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது.
மசோதாவை குடியரசுத் தலைவரிடம் கொண்டு சேர்க்கும் வெறும் தபால்காரன்தான் ஆளுநர் ஆர்.என். ரவி.
குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த நீட் விலக்கு தீர்மானம் நிலுவையில் இருக்கும்போதே அதற்கு ஒப்புதல் தர மாட்டேன் என ஆளுநர் கூறினார்.
ஆளுநரின் இத்தகைய போக்கை கண்டித்துதான் தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக போராட்டம் நடத்துகிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது.
திமுகவை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் எதிர்ப்பு தீர்மானத்தையும் அப்போதைய எதிர்க்கட்சியான திமுக ஆதரித்தது.
நீட் எதிர்ப்பு மசோதா மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதை சட்டப்பேரவைக்கே சொல்லாமல் அதிமுக அரசு மறைத்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது எனக் குறிப்பிட்டார்.