ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் வன்முறையில் தொடர்புடைய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ஆரவல்லி மலைத்தொடரின் பள்ளத்தாக்குகளில் நடந்த என்கவுண்டருக்குப் பிறகு, மாவட்ட குற்றப்பிரிவின் ஒரு குழு நூஹ்வில் உள்ள திடாரா கிராமத்தில் வசிக்கும் சந்தேக நபரான அமீர் என்பவரை சுட்டுப் பிடித்துள்ளனர்.
துப்பாக்கிச் சண்டையின் போது அமீரின் காலில் குண்டு காயம் ஏற்பட்டதையடுத்து, மேல் சிகிச்சைக்காக நல்ஹாட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஒரே வாரத்தில் நூவில் நடைபெற்ற இரண்டாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். முன்னதாக ஆக.16-ல் வன்முறையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தது.
நூஹ் வன்முறை வழக்கில் இதுவரை 61 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக 12 பேர் மீது எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என நூஹ் எஸ்பி நரேந்தர் பிஜர்னியா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீறுபவர்கள் கட்டாயம் காவல்துறையால் தண்டிக்கப்படுவர் என்று அவர் கூறினார்.
கடந்த ஜூலை 31-ஆம் தேதி அங்கு நடைபெற்ற ஊா்வலத்தின்போது ஹிந்துக்கள் மீது நிகழ்ந்த கல்வீச்சைத் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து ஹிந்து- முஸ்லிம்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்துக்கும் பரவியது.
இந்த வன்முறையில் 6 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனர். சாலையிலிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.