யுபிஐ செயலிகள் அடங்கிய எண்ம(டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனையில் குரல் மூலமாக பணம் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
எண்ம(டிஜிட்டல்) துறை வளர்ச்சியடைந்த இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலமாக எளிதாக பணம் அனுப்ப முடிகிறது. அதுபோல சாதாரண டீக்கடை தொடங்கி மிகப்பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் என அனைத்து இடங்களிலும் 'க்யூஆர் கோட்' மூலமாக பணம் அனுப்பும் முறையை பெரும்பாலானோர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
நாட்டில் நாளுக்கு நாள் எண்ம பணப்பரிவர்த்தனை அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறுகிறது. எண்ம பணப்பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும் பொருட்டு யுபிஐ செயலிகள் மற்றும் பரிவர்த்தனை முறைகள் மேம்படுத்தப்பட்டும் வருகின்றன.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இந்த 10 உணவுகளைக் கொடுக்காதீர்கள்!!
இந்நிலையில் யுபிஐ செயலிகள் பயன்படுத்தும்போது 4 இலக்க பாஸ்வேர்டு எண்ணுக்குப் பதிலாக குரல் அடையாளம் மூலமாக பணம் அனுப்ப முடியும் என்றால் நம்ப முடியுமா? ஆம், இந்த வசதி விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வரவிருக்கிறது. மேலும், இணைய வசதி இல்லாமல் பணப்பரிவர்த்தனை செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கி இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) தொழில்நுட்பம், மொழி செயலாக்கம்(natural language processing), குரல் அடையாளம்(voice recognition) மூலமாக செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட் ஸ்பீக்கரில் குரல் ஒலிப்பதிவு முறை மூலமாக உங்கள் போனில் இருந்து பணம் அனுப்ப முடியும். உதாரணமாக நீங்கள் யாருக்கு அனுப்ப வேண்டும் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்பதையும் குறிப்பிட்டால் உங்கள் குரலை அடையாளம் கண்டு பணம் அனுப்பும்.
இப்போது விரல் ரேகை பதிவு போல உங்கள் போனில் உங்கள் குரல் பதிவு மூலமாக அது அடையாளம் கண்டு பணப்பரிமாற்றம் நடக்கும்.
இது பயனர்களுக்கு மிகவும் எளிதாகவும் நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு வாலட், கார்டு, பாஸ்வேர்டு என எதுவும் தேவையிருக்காது.
குறிப்பாக வயதானவர்கள், கண் பார்வையற்றவர்களுக்கு உள்ளிட்டோருக்கு உதவும்.
இதன் மூலமாக எண்ம பணப்பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.