தில்லியில் உள்ள திகார் சிறையில் பணியாற்றும் 50 பணியாளர்களுக்கு சிறை நிர்வாகம் பணி நீக்கத்திற்கான நோட்டீஸை அனுப்பியுள்ளது. பயோ மெட்ரிக் தரவுகள் பணியாளர்களுடன் பொருந்தாததே இந்த பணநீக்க அறிவிப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
39 காவலர்கள், 9 உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு மேட்ரான்களின் பயோ மெட்ரிக் விபரங்கள், நிர்வாகத் தரவுகளோடு பொருந்தவில்லை என திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நோட்டீஸ் தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வாரியம் தேர்ந்தெடுத்த 450 பணியாளர்களில் 50 பேருக்கு இந்த நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிக்க: ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெறும்: அனுராக் தாக்கூர்
இந்த பணியாளர்கள் அனைவரும் வேலை கற்றுக்கொள்ளும் பிரிவில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளனர். அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு பணியாளர்கள் ஒரு மாதத்தில் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.