தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முகமது அசாருதீன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் -65, பிஆர்எஸ் - 40, பாஜக - 9, பிற - 5 இடங்களில் முன்னிலையில் உள்ளன. தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.
பெரும்பான்மைக்குத் தேவையான 60 இடங்களுக்கும் மேல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முகமது அசாருதீன் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
காங்கிரஸ் சார்பில் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்டுள்ள அவர் 25, 923 வாக்குகள் பெற்றுள்ளார். அசாருதீனைவிட, பிஆர்எஸ் வேட்பாளர் மாகந்தி கோபிநாத் 1,648 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.