பெங்களூரு : கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இயங்கி வரும் சர்க்கரை ஆலை ஒன்றில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், மாண்டியா மாவட்டத்தில் இயங்கி வரும் பல மருத்துவ ஸ்கேன் மையங்களில், இன்று(டிச.6) சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, அரசு விதிகளை முறையாகப் பின்பற்றாத ஸ்கேன் மையங்கள் சீல் வைக்கப்பட்டன.
முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்னர், சட்டவிரரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தனியார் ஏஜெண்டுகள் உள்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா, என்பதை கண்டறிவது தொடர்பாக கர்ப்பிணிகளை தொடர்பு கொள்ளும் சில தனியார் ஏஜெண்டுகள், அவர்களிடமிருந்து இந்த பரிசோதனைக்காக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்காக மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இயங்கி வரும் சர்க்கரை ஆலை ஒன்றில், பரிசோதனைக்கான அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டு, அங்கு ரகசியமாக கருவின் பாலினத்தை கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வந்துள்ளன.
பரிசோதனை முடிவில், சிசுவின் பாலினம் பெண் என்பது கண்டறியப்பட்டால், உடனடியாக கருக்கலைப்பு மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளிடம் அனுமதி கோரப்படும். அதனைத்தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு சிகிச்சை செய்வதற்காக, அவர்களிடமிருந்து இந்த கும்பல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்து கருக்கலைப்பு செய்துள்ளனர்.
அந்த வகையில், குறைந்தபட்சம், 900 கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பூதகரமாக வெடித்துள்ள கருக்கலைப்பு விவகாரம் குறித்து, சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.