திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீதான புகாரை விசாரித்த மக்களவை நெறிமுறைகள் குழு, அவையில் இருந்து அவரை பதவிநீக்கம் செய்யப் பரிந்துரைக்கும் அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்துள்ளது.
மக்களவை நெறிமுறைகள் குழுவின் தலைவரான வினோத் குமார் சோன்கர், அறிக்கையை அவையில் சமர்பித்தார். கேள்வி நேரத்தில் ஏற்பட்ட அமளியால் அவை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திரிணமூல் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அறிக்கையின் பிரதியைக் கேட்டு அமளியில் ஈடுபட்டனர்.
மொய்த்ராவை அவையில் இருந்து வெளியேற்றப் பரிந்துரைக்கும் அறிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பு விவாதம் நடத்தப்பட வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.
சலசலப்புகள் எழுந்ததால் அவையின் தலைவர் ராஜேந்திர அகர்வால், பிற்பகல் 2 மணிக்கு அவையை ஒத்திவைத்தார்.
நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப மஹுவா லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நெறிமுறைகள் குழு விசாரணை மேற்கொண்டது.
இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் பிரனீத் குமார் உள்பட ஆறு உறுப்பினர்கள் அறிக்கைக்கு ஆதரவாகவும் நான்கு பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
எதிர்க்கட்சிகள், இந்த அறிக்கை முன்முடிவு செய்யப்பட்டது என விமர்சனம் எழுப்பியுள்ளன.
இதையும் படிக்க: 3 மாநில முதல்வர்களைத் தேர்ந்தெடுக்கும் குழு: பாஜக அறிவிப்பு!
நெறிமுறைகள் குழுவின் பரிந்துரைக்கு அவையின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே மஹுவா அவையில் இருந்து நீக்கப்படுவார்.