ராஜஸ்தானில் அடுத்த முதல்வர் பதவி யாருக்கு என்ற பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில், இதுபோன்ற விவாதங்களைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் பாஜக எம்எல்ஏ பாபா பாலக்நாத்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், இதுவரை முதல்வர் அறிவிக்காதது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், பாலக்நாத் தவிர, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜுன் மேக்வால் மற்றும் தியா குமாரி ஆகியோரின் பெயர்கள் முதல்வர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களை மக்கள் புறக்கணிக்குமாறும், பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் நாம் அனுபவத்தைப் பெற வேண்டும் என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் வேட்பாளரை அறிவிக்க ராஜஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டம் நடத்தப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பார்வையாளர்களை பாஜக நியமித்துள்ளது.
200 தொகுதிகளில் 199 இடங்களுக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 3-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஸ்ரீகங்காநகரின் கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் தேர்தல் நடைபெறவில்லை.