தாணே : தண்ணீர்த் தொட்டியை சுத்தப்படுத்தும்போது மாடியிலிருந்து கால் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில் பன்வேல் பகுதியில் உள்ள ஒரு மூன்றடுக்குமாடிக் கட்டடத்தின் மொட்டைமாடியில் அமைந்துள்ள தண்ணீர்த் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில், மாருதி ஜோமா குட் என்ற 28 வயதான இளைஞர் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையில், எதிர்பாராதவிதமாக கால் தவறி, அவர் மாடியிலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதில் அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்று(டிச.9) காலை 11.45 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இறந்த இளைஞரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த இளைஞரின் மனைவி அளித்த புகாரின்பேரில், தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த இளைஞருக்கு முறையான பாதுகாப்புக் கவசங்கள் வழங்காத ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.