புதுதில்லி: புதிய நாடாளுமன்ற கட்டடம் பாதுகாப்பானதாக இல்லை என்றும் ஆளுங்கட்சி உறுப்பினரின் அனுமதியுடன் தான் அத்துமீறியவர்கள் வந்துள்ளனர் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் புதன்கிழமை வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர், திடீரென்று பிற்பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்து வண்ணப்புகைக் குப்பிகளை வீசியுள்ளனர். சர்வாதிகாரம் கூடாது என்று முழக்கமிட்டவாறே அவைத் தலைவர் இருக்கையை நோக்கி விரைந்துள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் மிகவும் எளிதாக நுழைந்து இத்தகைய தாக்குதலை நடத்த முடியும் என்பது மிகவும் கவலையளிக்கிறது.
நாடாளுமன்றத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ளது.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்குத் தடை!
மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணப் புகை தாக்குதல் நடத்தியவர்கள் மனோரஞ்சன், சாகர் ஷர்மா என தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்திய மனோரஞ்சன் மைசூரை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதலால் நாடாளுமன்றம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துமீறலைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்துள்ள காவல் ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பாதுகாப்புத் துறை பதிலளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் பாதுகாப்பானதாக இல்லை என்றும் ஆளுங்கட்சி உறுப்பினரின் அனுமதியுடன் தான் அத்துமீறியவர்கள் வந்துள்ளனர் என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார்.