கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உலகப்புகழ் பெற்ற பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் கேலரி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலத்தை திங்கட்கிழமை (டிசம்பர் 18) காவல்துறையினர் மீட்டனர்.
சடலமாக மீட்கப்பட்டவர், மைதானப் பராமரிப்பாளர் ஒருவரின் மகன் தனஞ்சய் பாரிக்(21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பின்னர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மன அழுத்தத்தில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் இது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, இறந்தவரின் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை மைதான் காவல் நிலையத்தில் அவரை காணவில்லை என்று புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.