நிகழாண்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டிய இந்திய பாரம்பரிய மருத்துவம்: ஆயுஷ் அமைச்சகம் 

நிகழாண்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டி இந்திய பாரம்பரிய மருத்துவம் சாதனை படைத்திருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நிகழாண்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டி இந்திய பாரம்பரிய மருத்துவம் சாதனை படைத்திருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஆயுஷ் அமைச்சகத்தின் நிகழாண்டு (2023-ம் ஆண்டு) செயல்பாடுகள், சாதனைகள் குறித்த அறிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது. அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:

ஆயுஷ் அமைச்சகம் சர்வதேச அளவில் சில தொலைநோக்குடன் திட்டங்களை செயல்படுத்துவதில் நிகழாண்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நிகழாண்டில் ஆயுஷ் அமைச்சகத்தின் இரு நிகழ்வுகள் அஸ்ஸாமில் நடைபெற்றன.  இந்த அமைச்சகத்தின் முதல் சிந்தனை முகாம் ஆண்டின் தொடக்கத்தில் அஸ்ஸôம் காசிரங்கா தேசிய பூங்காவில் நடைபெற்றது. 

இதில் ஆயுஷ் மருத்துவ முறையில் மின்னணு சுகாதார தொழில்நுட்பம், எதிர்கால முன்முயற்சி, சவால்கள், ஆயுஷ் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஆயுஷ் மருந்து தொழில்கள், ஆயுஷ் தயாரிப்புகளைத் தரப்படுத்தல் போன்றவை குறித்து இந்த அமர்வுகள் கலந்துரையாடப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதே அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடும், கண்காட்சியும் நிகழாண்டில் நடைபெற்றன. 19 நாடுகள் பங்குபெற்ற இந்த மாநாட்டின் கண்காட்சியில், ரூ.590 கோடிக்கு மேல் வர்த்தகமும் ஏற்பட்டது. 

பின்னர் நடைபெற்ற ஜி-20 தலைவர்கள் உச்சிமாநாட்டில், மாநாட்டின் பிரகடனத்தில் பாரம்பரிய மருந்துகள் தொடர்பான அம்சம் இணைக்கப்பட்டதில் இந்திய  பாரம்பரிய மருத்துவத்துக்கு விஞ்ஞானபூர்வ அந்தஸ்தோடு, சர்வதேச அளவில் முக்கிய இடத்தைப் பெறவைத்தது. 

நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர்மோடி பங்கேற்றார். அதில் இருவேறு கின்னஸ் உலக சாதனைகள் பதிவாகின. 

நிகழாண்டின் 9-ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, "யோகாவின் பெருங்கடல் வளையம்' (ஓஷன் ரிங் ஆஃப் யோகா) என்ற தனித்துவமான அம்சம் நடத்தப்பட்டது. 

இதில் 19 இந்திய கடற்படை கப்பல்களில் சர்வதேச நாடுகளின் கடற்படை வீரர்கள்  1,200 பேர் உள்ளிட்ட சுமார் 3,500 கடற்படை வீரர்கள், 35,000 கி.மீ. தூரத்துக்கு சர்வதேச கடல்களில் யோகா தூதர்களாக பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனை செய்தனர். ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரையிலான யோகாவும் 2023 ஆம் ஆண்டின் யோகா தினத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் உலகளாவிய உச்சி மாநாடு குஜராத்  தலைநகரம் காந்தி நகரில் உலக சுகாதார அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம், அதைச் செயல்படுவதற்கான உலக சுகாதார அமைப்பின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி, "குஜராத் பிரகடனம்' வெளியிடப்பட்டது.

நவம்பர் 10-ஆம் தேதி ஆயுர்வேத தினமாக அனுசரிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயுர்வேதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரபலமடைந்தது. 

மேலும் ஆயுஷ் அமைச்சகம் பாரம்பரிய மருத்துவத் துறையில் உலக சுகாதார அமைப்புடன் திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஆயுஷ் விசா: ஆயுஷ் விசா மத்திய அரசால் நிகழாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய மருத்துவ முறைகளின்கீழ் சிகிச்சை பெற இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு சிறப்பு விசா அளிக்கப்பட்டது. இந்த ஆயுஷ் விசா மருத்துவப் பயணம் இந்தியாவை ஒரு மருத்துவ மையமாக மாற்றியது.

உள்நாட்டில் தேசிய ஆயுஷ் இயக்கத்தின் முதன்மைத் திட்டத்தால் சுகாதார சேவைகளில் ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவம் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

நிகழாண்டில் முதல் 10 மாதங்களில் 6.91 கோடி மக்கள் ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் மூலம் பயனடைந்தனர்.

ஆயுஷ் அமைச்சகத்தின்  பல்வேறு திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, பல்வேறு உச்சி மாநாடு ஆகியவற்றில் 'ஆயுஷ் பர்வ்'  கண்காட்சி வடகிழக்குப் பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்துவதில் கணிசமான பங்களிப்பை வழங்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com