பிராந்திய விமானத் திட்டத்தில் 60 புதிய வழித்தடங்கள் 

நிகழாண்டில் பிராந்திய அளவிலான விமான இணைப்புகளில் "உடான்' திட்டத்தின் கீழ் 60 புதிய வழித்தடங்கள்  தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
plane080400
plane080400
Updated on
2 min read

நிகழாண்டில் பிராந்திய அளவிலான விமான இணைப்புகளில் "உடான்' திட்டத்தின் கீழ் 60 புதிய வழித்தடங்கள்  தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மேலும், "உடான்' திட்டத்தின் கீழ் 154 புதிய ஆர்.சி.எஸ். வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு விரைவில் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் 2023-ஆம் ஆண்டின் முக்கிய சாதனைகள் பின்வருமாறு:  பிராந்திய அளவிலான சிறிய விமான நிலையங்கள் இணைப்புகளுக்கான "உடான்' விமானத் திட்டம்  (ஆர்.சி.எஸ்.) கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது விமான சேவையற்ற பல்வேறு பிராந்தியங்களை இணைக்கும் குறைந்த அளவு விமான சேவை கொண்ட வழித்தடங்களாக செயல்படுத்தப்படுகிறது.
இதன் முக்கிய கவனம், சீரான பிராந்திய வளர்ச்சியை ஊக்குவித்து மக்களுக்கு மலிவு விலையில் விமானப் போக்குவரத்து சேவையை வழங்குவதாகும். ஆர்.சி.எஸ். உடான் சேவை ஒரு சுயநிதித் திட்டம் என்றாலும், கட்டணங்களுக்கு குறைந்தபட்ச வரி, பிரதான வழித்தடங்களிலிருந்து ஒவ்வொரு புறப்பாட்டுக்கும்  மானியம் அளிக்கப்படுகிறது.
நிகழாண்டில் ஜனவரி முதல்  டிசம்பர் 21-ஆம் தேதி வரை 60 புதிய ஆர்.சி.எஸ்.  வழித்தடங்கள் தொடங்கப்பட்டன. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் 12 புதிய ஆர்.சி.எஸ். பாதைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், "உடான்'  4.2 மற்றும் 5.0 பதிப்புகளின் கீழ் 154 புதிய ஆர்.சி.எஸ். வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டிஜி யாத்ரா: விமான நிலையங்களில் தடையற்ற செயலாக்கத்தை அடைவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாக டிஜி யாத்ரா செயலி உள்ளது.  எந்தவொரு பயணியும் விமான நிலையத்தின் பல்வேறு சோதனைச் சாவடிகளைக் காகிதமற்ற மற்றும் தொடர்பு இல்லாத செயலாக்கத்தின் மூலம் முக அம்சங்களைப் பயன்படுத்தி அடையாளத்தை நிறுவலாம்.  பயணிகள் தங்கள் வீட்டிலிருந்தபடியே இந்தச் செயலியின் தளத்தில் பதிவு செய்யலாம். இதில் 13 விமான நிலையங்களில் டிஜி யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.  இதுவரை 35 லட்சத்துக்கும் அதிகமானோர் டிஜி யாத்ரா செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். விரைவில் அனைத்து விமான நிலையங்களும் படிப்படியாக டிஜி யாத்திரையால் நிர்வகிக்கப்படும்.
பசுமை விமான நிலையங்கள்: மத்திய அரசு பசுமை விமான நிலையக் கொள்கை(கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் ), 2008-ஆம் ஏற்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு இதுவரை "கொள்கை அளவில்' ஒப்புதல் அளித்துள்ளது.  புதுச்சேரியில் காரைக்கால் உள்பட 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. 
இதில் 12 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.  விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் (ஏ.டி.சி.ஓ.)  பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 456 ஏ.டி.சி.ஓ. பணியிடங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விமானப் பயிற்சி நிறுவனங்கள்: தற்போது நாட்டில் உள்ள 55 விமானப் பயிற்சி தளங்களில் 34 தளங்கள்  சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.)அங்கீகாரம் அளிக்கப்பட்டு செயல்படுகின்றன. இவற்றில் மத்திய அரசின்கீழ் அமேதியில் உள்ள இந்திரா காந்தி தேசிய விமான அகாதெமியும், மாநில அரசுகளின் கீழ் எட்டு  தளங்களும்,  தனியார் துறையின் கீழ் 25 விமானப் பயிற்சி தளங்களும் உள்ளன. 
இவற்றின் மூலம் 2018-ஆம் ஆண்டில் 640 விமானிகளுக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்த  நிலையில், நிகழாண்டில்  இதுவரை 1,562 பேருக்கு விமானிகளுக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. "ட்ரோன்' இயக்குவோருக்கு சுமார் 9 ஆயிரம் "ரிமோட் பைலட்' சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com