மதத்தை அரசியலாக்கக் கூடிய ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்துகொள்ளாது என்று பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்கு சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான பிருந்தா காரத் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “மக்களின் மத உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் பாஜகவினர் மதத்தை அரசியலுடன் இணைக்கின்றனர். இது ஒரு மத நிகழ்ச்சி. இந்த மத நிகழ்ச்சியை பாஜகவினர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். இது சரியல்ல. எனவே எங்கள் கட்சி இந்த விழாவில் கலந்துகொள்ளாது.
மதத்தையும், அரசியலையும் தனித்தனியாக வைக்க வேண்டும். இரண்டையும் கலப்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டமாகும். மதத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது மிகவும் தவறாகும். அரசியலுக்காக மதம் பயன்படுத்தப்படும்போது மதம் அதற்கான மரியாதையை இழக்கிறது.” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | வேங்கைவயல் ஓராண்டு நிறைவு: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது?
ராமர் கோயிலின் சார்பில் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.