புது தில்லி: நாடு முழுவதும் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீவிர நுரையீரல் பாதிப்பு இருக்கும் நோயாளிகளுக்கு கரோனா பரிசோதனையை அதிகரிப்பது என்று எய்ம்ஸ் மருத்துவமனை முடிவு செய்திருக்கிறது.
தில்லியில் ஜேஎன்.1 திரிபு கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையில், பல துறை மருத்துவர்களுடன், மருத்துவமனை இயக்குநர் கலந்தாலோசனை நடத்தி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்துக்குப் பிறகு மருத்துவமனை வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறையில், தீவிர சுவாசப் பிரச்னை இருப்பவர்கள், 38 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு கிட்டத்தட்ட உடல் வெப்பத்துடன் காய்ச்சல் இருப்பவர்கள், கடந்த 10 நாள்களாக இருமல் இருப்பவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
உலகம் முழுவதும் ஜெஎன்.1 வகை கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், தென்கிழக்காசிய நாடுகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது.
பல்வேறு உலக நாடுகளில் குளிா்காலம் தொடங்கியுள்ள நிலையில், கரோனா தொற்றுடன் பிற நோய்த் தொற்றுகளின் அதிகரிப்புக்கும் இந்தத் திரிபு காரணமாக அமையலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
உலக அளவில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் சூழலில், கரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.