

சென்னை மெரீனா கடற்கரைப் பகுதி கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடை விதிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு. கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் கடலில் 134 அடி உயர பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட 8 மீனவர்கள் ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிகளை மீறும் வகையில் இந்த பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது. இந்த பேனா சின்னம் அமைப்பதற்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பிய நிலையில், கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அதன் விவரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பேனா நினைவுச் சின்னம் அமைப்பது கடல் வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.