2024 மக்களவைத் தேர்தலில் ஆர்ஜேடி மற்றும் ஜேஎம்எம் இணைந்து போட்டியிடும் என்று பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, நாங்கள் ஆர்ஜேடி மற்றும் ஜேஎம்எம் இணைந்து 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோம். ஜார்க்கண்டில் கட்சியின் பணிகளைப் பார்க்க வர திட்டமிட்டிருந்தேன். ஆனால் இடையே லாலு பிரசாத் ஜியின் உடல்நிலை மோசமடைந்தது.
லாலுஜியின் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் இன்று வீடு திரும்புகிறார். பிகாரில் பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மகாகத்பந்தன் அரசு அமைந்தது. இந்த பிரச்னைகள் காரணமாக ஜார்கண்ட் மாநிலத்திற்கு வர முடியவில்லை. ஜார்கண்டில் ஆர்ஜேடியின் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எங்கள் போராட்டம் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரானது. பாஜக மலிவான அரசியல் செய்து வாக்காளர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறது.
லாலு யாதவ் குணமடைந்து சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்புவதைப் போல ஷிபு சோரன் ஜியும் விரைவில் குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் பிப்ரவரி 9-ம் தேதி ராஞ்சியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.