பிரதமர் மோடியின் ஆட்சியில் 80 சதவிகிதம் தீவிரவாதம் குறைந்துள்ளது: அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி தலையிலான அரசில் ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதம், வடகிழக்கு ஊடுருவல் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் போன்றவை 80 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் 80 சதவிகிதம் தீவிரவாதம் குறைந்துள்ளது: அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி தலையிலான அரசில் ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதம், வடகிழக்கு ஊடுருவல் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் போன்றவை 80 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவை உலக அரங்கில் முதன்மையான நாடாக மாற்ற விரும்பும் பிரதமரின் எண்ணம் குறித்தும் அவர் தெரிவித்தார். மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் லோக்மத் ஊடகக் குழுவினால் அதனுடைய மராத்தி பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: இந்தியா அதனுடைய 100-வது சுதந்திர தினத்தை இன்னும் 25 ஆண்டுகளில் கொண்டாட உள்ளது. இந்த நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு முன்பாக மூன்று முக்கிய நோக்கங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். முதலாவதாக இந்த கால தலைமுறையினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை எடுத்துரைக்க வேண்டும். இரண்டாவதாக கடந்த 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மூன்றாவதாக, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவினை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றமடைந்த நாடாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு 80 சதவிதம் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு திறம்பட கையாண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதம், வடகிழக்கு ஊடுருவல், இடதுசாரி தீவிரவாதம் போன்றன நாட்டில் 80 சதவிகிதத்துக்கு குறைந்துள்ளது. ஒரு ஆண்டில் 1.8 கோடி சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வந்துள்ளனர். இது மிகப்பெரிய விஷயம். கடந்த 70 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி காஷ்மீருக்காக செலவிடப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெறும் மூன்றே ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடியினை காஷ்மீருக்காக செலவிட்டுள்ளது. 

காஷ்மீரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்க் குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி போன்றன கொண்டு வரப்பட்டுள்ளன. இது மிகப் பெரிய அளவிலான மாற்றம். வடகிழக்குப் பகுதிகளில் தீவிரவாத ஊடுருவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கின் 60 சதவிகிதப் பகுதிகளில் ஆயுதப் படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. உலகின் முதன்மையான நாடாக இந்தியாவை மாற்றுவதே பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணம்.

பாதுகாப்புத் துறை உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது. 70 சதவிகித பாதுகாப்புத் துறைச் சார்ந்த பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இந்தியா உலக அளவில் பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தியின் கூடாரமாக மாறியுள்ளது. அரசு மக்களுக்கு பயனளிக்கும் முடிவுகளையே எடுத்து வருகிறது. அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கும் நாடாக மாறும். அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் செயற்கைக் கோள் துறையிலும் இந்தியா முன்னணி நாடாகத் திகழும் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com