ஜம்மு-காஷ்மீர் மக்கள், சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதால் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தற்போது உணரத் தொடங்கியுள்ளதாக மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
சட்டப்பிரிவு 370-ன் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து உரிமை எப்படி அவர்களுக்கு பாதுகாப்பு கவசமாகத் திகழ்ந்தது என்பதையும் மக்கள் உணரத் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் ஜனநாயக் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: அதிகரிக்கும் காட்சிகள்: தொடரும் ‘பதான்’ டிக்கெட் கட்டண சலுகை!
இந்த நிகழ்ச்சியில் மெகபூபா முப்தி பேசியதாவது: கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு எனது அப்பா முப்தி முகது சயீது பாஜகவுடன் கைகோர்த்தார். அப்போது அவர் பாஜக என்ற மிருகத்தை வெற்றிகரமாக கூண்டில் அடைத்துக் கட்டுப்படுத்தினார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டவுடன் அது மக்கள் ஜனநாயக் கட்சி மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியை மட்டுமே பாதிக்கும் என மக்கள் நினைத்தார்கள். ஆனால், இப்போது புல்டோசர்கள் நம்முடைய வீடுகளையும், தொழிலையும், வீட்டு விலங்குகளுக்கான தங்குமிடங்களையும் இடித்துத் தள்ள வருகிறது. சட்டப்பிரிவு 370 எப்படி ஒரு பாதுகாப்பு கவசமாக ஜம்மு-காஷ்மீருக்கு இருந்தது என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள்.
2014 மக்களவைத் தேர்தலில் மக்கள் ஜனநாயக் கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் மக்கள் ஜனநாயக் கட்சி 43 தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 28 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஜம்முவில் பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பதற்கு 3 மாதங்கள் ஆனது. ஜம்மு-காஷ்மீரில் பாஜகவினைக் நாங்கள் தான் கொண்டு வந்தோம் என குற்றம் சாட்டப்படுகிறோம். ஆனால், அவர்களை எப்படி தடுக்க முடியும்? அவர்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் உள்ளனர்.
அதேபோல ஜம்முவிலும் பெரும்பான்மையைப் பெற்றுவிட்டனர். இதனால், மக்கள் ஜனநாயக் கட்சி வேறு வழியின்றி அவர்களுடன் கைகோர்க்க நேர்ந்தது. அப்படி செய்தால் மட்டுமே அவர்களைத் தடுக்க முடியும் எனத் தோன்றியது. ஓராண்டுக்கு முப்தி ஷாகிப் முதல்வராக இருந்தார். அதன் பிறகு, 2 ஆண்டுகளுக்கு நான் முதலமைச்சராக இருந்தேன். நாங்கள் எங்களது பணிகளை மேற்கொண்டோம். நான் பாஜகவின் பேச்சைக் கேட்டு அவர்கள் வழியில் நடந்திருந்தால் இன்றும் கூட ஜம்மு-காஷ்மீரின் முதல்வராக நான் இருந்திருப்பேன். நான் அப்படி செய்யாததால் அவர்கள் எனது அரசுக்கான ஆதரவினை விலக்கிக் கொண்டனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.