பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடித்த பதான் படத்தின் டிக்கெட் கட்டண சலுகை மேலும் இரண்டு நாள்களுக்குத் தொடர்ந்துள்ளது.
பதான் படம் கடந்த மாதம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது. ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் இதுவரை மொத்தமாக ரூ. 981 கோடி வசூலித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் ரூ. 508 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய முதல் ஹிந்திப் படம் என்கிற பெருமையை பதான் பெற்றுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய படம் - ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2.
முன்னதாக, இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளான பிவிஆர், ஐனாக்ஸ், இந்தியா சினிபோலிஸ் மற்றும் வேறு சில திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை மட்டும் ரூ. 110 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், பதான் படத்துக்கு அதிகளவில் ரசிகர்கள் குவிந்து வருவதால் சனி, ஞாயிறு என மேலும் இரண்டு நாள்களுக்கு ரூ. 200 மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஷாருக் கானின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த டிக்கெட் சலுகையால் இந்தியா முழுக்க பதான் படத்துக்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் புதிய படங்கள் வெளியான பிறகும் பதான் படத்தின் வசூல் குறையாமல் உள்ளது.